Thursday, 2 July 2020

சீன படைகள் ஏன் வித்தியாசமானவை?


கர்னல் ஆர் ஹரிஹரன் | தினமலர் | 01-07-2020

பலர் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, 'சீன ராணுவம் நம்ம ராணுவத்தை விட ரொம்ப சக்தி வாய்ந்ததா சார்...' என, பலரும் என்னிடம் கேட்பது வழக்கம். அவர்களுக்கு நான், என் பாணியில், 'சீனா, வெங்காயம் என்றால், நாம், வெள்ளைப்பூண்டு' என, பதிலளிப்பேன். பல்வேறு நாடுகளின் போர்த்திறன் மதிப்பீட்டு நிறுவனமான, 'குளோபல் பயர் பவர்' நடப்பு, 2020ல் -வெளியிட்ட, 138 உலக ராணுவங்களின் மதிப்பீட்டில், சீன ராணுவம், மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, முதல் இடத்திலும், ரஷ்யா, இரண்டாம் இடத்திலும் உள்ளன.

நம் இந்தியா, சீனாவை அடுத்து, நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த ஆய்வு நிறுவனம், நாடுகளின் போர்த்திறன் மதிப்பீட்டை, ராணுவத்தின் படைகளின் எண்ணிக்கை, போர் விமானங்கள், போர் கப்பல்கள், அணு ஆயுதங்கள், போர்க்கலன்கள் மற்றும் ஆயுதங்களின் அடிப்படையில் மட்டுமே செய்வதில்லை

மூன்றில் ஒரு பங்கு தான் அதிகம்

அவற்றைத் தவிர, அந்த நாட்டின் மனிதவளம், முப்படை பலம், இயற்கை வளம், 'லாஜிஸ்டிக்ஸ்' என்று கூறப்படும், ஏற்பாட்டியல், பொருளாதாரம் மற்றும் புவியியல் சார்ந்த, 50 கூறுகளை கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்கிறது. குளோபல் பயர் பவர் மதிப்பீட்டின் படி, சீன முப்படைகளின் எண்ணிக்கை, 21.83 லட்சம்; இது, இந்தியாவின் முப்படை பலமான, 14.83 லட்சத்தை விட, மூன்றில் ஒரு பங்கு தான் அதிகமாகும். ஆனால், சீன ராணுவப் படைகள், 14 அண்டை நாடுகளை ஒட்டிய, உலகிலேயே மிக நீளமான, 22 ஆயிரத்து, 117 கி.மீ., எல்லையையும் மற்றும் ஏழு நாடுகளுடன் ஆன கடல் எல்லையையும் பாதுகாக்கின்றன.

இதற்கு மாறாக, நம் இந்திய ராணுவப் படைகள், ஒன்பது அண்டை நாடுகளுடன், 15 ஆயிரத்து, 200 கி.மீ., எல்லையையும், ஏழு நாடுகளுடன் ஆன கடல் எல்லையையும் பாதுகாக்கின்றன. ஆகவே, இரு நாடுகளும் தமது பாதுகாப்புத் தேவைக்கு ஏற்ப, படைகளை உருவாக்கியுள்ளன. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களை நிலம், கடல் மற்றும் வானில் இயங்கக்கூடிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் சக்தி உடையவை. இந்தியாவின், 'பிரம்மோஸ்-' ஏவுகணை, கடல் அலைகளின் மேல் தாவிச் செல்லும், 'க்ரூய்ஸ்' ரக ஏவுகணை 500 கி.மீ., பாயக்கூடியது.

இது, உலக அளவில் வலிமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சீனா உருவாக்கிய, டி.-எப்., 26 தரைவழி ஏவுகணை, 5,000 கி.மீ., பாயக் கூடியது. இந்த இரு ஏவுகணைகளின் உருவகமே, இரு நாடுகளின் மாறுபட்ட குறிக்கோள்களை காட்டுகின்றன. இந்தியாவின் குறிக்கோள், தன் செல்வாக்குள்ள தெற்காசியப் பகுதியையும், அதைச் சார்ந்த இந்தியப் பெருங்கடலையும் பாதுகாப்பதாகும். அதற்கேற்ப, பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

சரித்திரம் கூறும் உண்மை

ஆனால், சீனாவின் ஆசையோ உலகிலேயே மிகப் பலம் வாய்ந்த நாடாக முன்னேற வேண்டும் என்பதாகும். அதனால், சீனாவிலிருந்து இன்னொரு கண்டத்தை தாக்கக் கூடிய, டி.எப்., 26 ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இத்தகைய மதிப்பீடுகளில் உள்ள படைகளின் எண்ணிக்கை அல்லது ஆயுத பலம் மட்டுமே போரில், ஒரு நாட்டின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பதில்லை. போர்க் களத்தில் குறித்த இலக்குளை அடைய எவ்வாறு ராணுவம் செயல்பட்டது என்பதே, போரின் வெற்றி, தோல்வியை நிச்சயிக்கும். இதற்கு பல்வேறு உதாரணங்கள் உண்டு. சிறிய வளரும் நாடான, வடக்கு வியட்நாம், உலகின் வலிமை வாய்ந்த அமெரிக்க ராணுவத்தை தோற்கடித்தது. இது, சரித்திரம் கூறும் உண்மை. ஆனால், சீன ராணுவத்தை குறைத்து எடை போடக்கூடாது. ஏனெனில், மற்ற ஜனநாயக நாட்டு ராணுவங்களைப் போல அல்லாமல், முப்படைகளையும் கொண்ட, 'மக்கள் விடுதலைப் படை' என்ற சீன ராணுவத்தின் பெயரே, அதன் தனித்தன்மையை காட்டுகிறது. மக்கள் விடுதலைப் படையின் சரித்திரம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியோடு ஒருங்கிணைந்தது.

சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகார அரசை நிறுவ நடந்த உள்நாட்டுப் போரில், கொரில்லாப் படையாக, 1927-ல் தோன்றிய இந்த படை, இன்று, உலகில் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ராணுவம், இன்று வரை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போர்வாளாக செயல்படுகிறது. சீன ராணுவத்தில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியின்
அங்கத்தினர்களாவர். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று கூறப்படும் சீன பார்லிமென்டில், மக்கள் விடுதலைப் படையை சேர்ந்த, 268 பேர் அங்கம் வகிக்கின்றனர்.


ஆகவே, சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு எடுக்கும் முடிவுகளில், மக்கள் விடுதலைப் படையின் பெரும் பங்குண்டு. அந்நாட்டின் அதிபர், ஸி ஜின்பிங், ஆளும் கட்சியின் மத்திய செயற்குழுத் தலைமையைத் தவிர, சீன ராணுவகட்டுப்பாட்டு மையமான, மத்திய ராணுவ கமிஷனுக்கும் தலைவர் ஆவார்.


தற்போது, பாதுகாப்பு முடிவுகளை எடுக்கவும், அதற்கு ஏற்றது போல, மற்ற அரசு அங்கங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப செயலாக்கவும், அதிபர் ஸி கையில் அதிகாரம் உள்ளது.இதற்கு முற்றிலும் மாறாக, இந்திய ஜனாதிபதி பெயரளவில் முப்படைகளின் தலைவர் என்றாலும், அவர் பிரதமரின் விருப்பத்துக்கு இணங்கவே, பாதுகாப்பு மற்றும் முப்படைகள் சார்ந்த முடிவுகள் எடுப்பது நம் ஜனநாயக மரபு. ஆகவே, மக்கள் விடுதலை படையின் பிரமாண்ட வளர்ச்சியை, நம் ராணுவத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏனெனில், இரு நாடுகளும் மிகப்பெரிய ஆசிய நாடுகள் தான் என்றாலும், அவற்றின் அரசியல், கலாசாரம், சரித்திரம் மற்றும் அரசியல் சட்டங்கள் வெவ்வேறானவை.

அடிப்படை போர் கோட்பாடுகள்

ஆகவே, இரு நாடுகளும், தங்கள் நாட்டின் பாதுகாப்பு தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றவாறு தம் படைகளை உருவாக்கிஉள்ளன. உலக ராணுவங்கள், தங்கள் நாட்டு பாதுகாப்புத் தேவைகளை யும் போர் அனுபவங்களையும் ஆய்ந்து, ராணுவத்தின் அடிப்படை போர் கோட்பாடுகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, இந்திய ராணுவத்தின் போர் கோட்பாடுகள், ஏறத்தாழ, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட, ஆங்கில காலனி அரசின் அனுபவ ரீதியாக வழிவந்தவை. இந்தியாவும்மற்ற ராணுவங்களைப் போல், அவற்றில் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய மாற்றங்களை செய்துள்ளது. ஆனால், சீனாவின் மக்கள் விடுதலைப் படையின் போர் கோட்பாடுகள், அதன் கட்சியுடன் இணைந்த பின்னணி சார்ந்ததாகும்!- சீனாவின் வியூகம், நாளை!

கர்னல் ஆர்.ஹரிஹரன் haridirect@gmail.comஇவர், ராணுவ நுண்ணறிவுத் துறையில், 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். தெற்காசிய நாடுகள் மற்றும் சீனாவின் நிகழ்வுகளை ஆய்பவர்.

No comments: